இறைவர் : அருள்மிகு கபாலீஸ்வரர்
இறைவி :அருள்மிகு கற்பகாம்பாள் அம்மன்
தல மரம் : புன்னை மரம்
தீர்த்தம் : கபாலி தீர்த்தம்
God : Arulmigu Kabaliswarar
Godess :Arulmigu Karpagaambaal Amman
Tree : Punnai Maram
Theertham : Kabali Theertham
பிரதோஷம் என்பது ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய வளர்பிறை மற்றும் தேய் பிறையில் வரும் திரயோதசி திதி தினத்தில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பிரதோஷ காலமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இரவும் பகலும் சந்திக்கிற நேரத்திற்கு உஷாக்காலம் என்று பெயர். மாலை வேளையில் அதிதேவதை சூரியன் மணைவியாகிய உஷா என்பவளாவாள். இவர் பெயரிலேயே உஷாக்காலம் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு நேர் எதிராக பகலும் இரவும் சந்திக்கும் நேரம் பிரத்யுஹத்காலம் எனப்படும் சூரியனின் இன்னொரு மணைவியாகிய பிரத்யுஷா இக்காலத்தின் அதிதேவதை அவரது பெயரிலேயே பிரத்யுஷத் காலம் என அழைக்கப்பட்டது. இப்போது பேச்சு வழக்கில் பிரதோஷம் என அழைக்கபடுகிறது. பிரதோஷம் என்றால் குற்றமில்லாதது எனப்பொருள். எனவே இந்த பொழுதில் வழிபட்டால் நம்முடைய தோஷங்கள் நீங்கும்.
பிரதோஷம் என்றால் சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது இந்தப் பிரதோஷ நேரத்தில் தான். தேவர்களும், அசுரர்களும் போட்டி போட்டுக் கொண்டு பாற்கடலைக் கடைந்தபோது திருமகள், ஐராவதம், காமதேனு, கற்பகத்தரு, சிந்தாமணி, கௌஸ்துப மணி முதலியவை ஒவ்வொன்றாகத் தோன்றின. லட்சுமியைத் திருமால் ஏற்றுக் கொண்டார். மற்ற பொருட்களை இந்திராதி தேவர்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால் கூடவே கொடிய ஆலகால விஷமும் வெளிப்பட்டது. இதைக்கண்டு தேவர்களும், முனிவர்களும் பெரிதும் நடுங்கினர். உயிர்களைக் காப்பாற்ற பரமசிவன் அந்த ஆலகால விஷத்தை உண்டார். தன் கணவரின் உடலில் விஷம் பரவுவதைக்கண்ட பார்வதி தேவி தன் தளிர்க்கரங்களால் அவரைத் தொட விஷம் சிவனின் நெஞ்சுக் குழியிலேயே நின்றுவிட்டதால் இறைவன் நீலகண்டனானார். இந்த நேரம் தான் பிரதோஷ காலம் என்று வணங்கப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை - ஆதிப் பிரதோஷம்
திங்கட்கிழமை - சோமவார பிரதோஷம்
செவ்வாய்க்கிழமை - மங்கள வாரப் பிரதோஷம்
புதன்கிழமை - புதவாரப் பிரதோஷம்
வியாழக்கிழமை - குருவாரப் பிரதோஷம்
வெள்ளிக்கிழமை - சுக்ர வாரப் பிரதோஷம்
சனிக்கிழமை - மஹா பிரதோஷம்
சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் "உத்தம மகா பிரதோஷம்" ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்.
சிவபெருமானின் தரிசனத்திற்குச் செல்பவர்கள் முதலில் நந்தி பகவானை வணங்கிவிட்டுத்தான் செல்ல வேண்டும். நந்தி பகவானின் அனுமதிபெற்றுச் சிவபெருமானை அவருடைய கொம்புகளுக்கிடையேயுள்ள வழியாகப் பார்த்துவிட்டுத்தான் செல்ல வேண்டும்.
பால் - நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும். தயிர் - பல வளமும் உண்டாகும். தேன் - இனிய சாரீரம் கிட்டும். பழங்கள் - விளைச்சல் பெருகும். பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும். நெய் - முக்தி பேறு கிட்டும். இளநீர்- நல்ல மக்கட் பேறு கிட்டும். சர்க்கரை- எதிர்ப்புகள் மறையும். எண்ணெய்- சுகவாழ்வு. சந்தனம்- சிறப்பான சக்திகள் பெறலாம். மலர்கள் - தெய்வ தரிசனம் கிட்டும் .
பிரதோஷ வேளையில் சிவலிங்கத் திருமேனிக்கு பால், இளநீர், தேன், தயிர், விபூதி, சந்தனம், பன்னீர், பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, செவ்வந்தி, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்து தூப, தீப வழிபாடுகள் நடைபெறும். அதற்கு முன்பு நந்தியெம்பெருமானுக்கும் அபிஷேகம் நடைபெறும். அருகம்புல், மலர்கள் சாத்திய பிறகு வில்வத்தால் நந்திதேவருக்கு அர்ச்சனை செய்வார்கள். நந்தி பகவானுக்கு தீபம் காட்டி, அதன் பின்னர், மூலவருக்கு நடைபெறும் தீபாராதனையை நந்தியெம்பெருமானின் இரு கொம்புகளுக்கிடையே கண்டு தரிசிப்பது விசேஷம். இவ்வாறு தரிசனம் செய்ய, பாவங்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சுபிட்சம் உண்டாகும்